சியாசின் பகுதியில் பனிப் பாறை சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாசின் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பனிச்சரிவு ஏற்பட்டதில் ஜியாரி என்ற இடத்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 124 பேர் உள்ளிட்ட 135 பேர் பலியாயினர். 19 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பனிப்பாறையில் சிக்கியுள்ள சடலங்களை மீட்க மோப்பநாய்களும் இயந்திரங்களும் நேற்று கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார். பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு கி.மீ. நீளத்துக்கு 80 அடி உயரத்துக்கு பனித் துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இதன் அடியில் சிக்குண்ட சடலங்களை மீட்க ராவல்பிண்டியில் இருந்து நவீன இயந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளன. பனிப்பாறையில் சிக்கி யாராவது உயிரோடு இருந்தால் அவர்களை உடனடியாக மீட்க ஹெலிகாப்டர்களும் கூடுதல் ராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பனிப் பொழிவு தொடர்வதால் மீட்புப் பணியில் தொய்வு காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனி பாறையில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவையான மனிதாபிமான உதவிகளை செய்ய தாயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லி வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் இந்தியாவின் உதவியை ஏற்பதாக சர்தாரி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment