2000ஆம் ஆண்டில் தமிழக அரசு சிவத்தம்பிக்கு திரு.வி.க. விருதினை வழங்கிச் சிறப்பித்தது. விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய தமது உரையில் "சுவாமி விபுலானந்தா கா.சு.பிள்ளை தெ.பொ.மீ வையாபுரிப் பிள்ளை கணபதிப்பிள்ளை எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்" என்று தன்னடக்கத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்தார். அவையடக்கம் தமிழ் மரபுதான் அந்த அடக்கத்துக்குள் அவருடைய விரிவான ஆய்வுச் செயற்பாடுகள் கடலளவு பரந்து கிடக்கின்றன என்பதே உண்மை.
1932ஆம் ஆண்டு மே திங்கள் 10ஆம் நாள் டி.பி.கார்த்திகேசு வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார் சிவத்தம்பி. பள்ளிப்படிப்பைத் தனது சொந்த ஊரான கரவெட்டியிலும் புகுமுக வகுப்பைக் கொழும்பு ஜாகிரா கல்லூரியிலும் பயின்றார்.