Monday, January 16, 2012

அமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்!!!!

மர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும் நாளுக்கு நாள் புதுப்புது விடயங்கள் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும், செய்திகளாகவும் வெளிவந்த வண்ணமேயுள்ளன. பெரும்பாலான பறக்கும் பொருட்கள் ‘பறக்கும் தட்டுகள்’ (flying saucers) போன்றே  தோற்றமளிக்கின்றன. இந்த பறக்கும் தட்டுகள் தொடர்பான கதைகள் இன்று நேற்றல்ல அது பல நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற ஒரு மர்மமாகும்.  இவை எங்கிருந்து வருகின்றன? இதில் பயணிக்கும் அந்நியர்கள் எப்படியானவர்கள்? அவர்கள் பூமிக்கு வருவதன் நோக்கமென்ன? அவர்களுக்கும் மனிதர்களுக்குமுள்ள தொடர்பு என்ன? அவர்களுடைய தொழிநுட்பம் எத்தகையது? இவை உண்மையானவையா? போன்ற பல கேள்விகள் விடையின்றி விரிந்துகொண்டெ செல்கின்றன.
இவ்வாறிருக்கையில் அமெரிக்காவின் ரொஸ்வெல் எனும் பிரதேசத்தில் 1947ம் ஆண்டு நடந்த ஒரு மிக முக்கியமான சம்பவம், பறக்கும் தட்டுகள் தொடர்பாகவும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும் இருந்து வந்த மர்மத்தை மேலும் அதிகரித்ததுடன், உலக மக்களிடையே பறக்கும் தட்டுகள் தொடர்பான ஆர்வத்தையும் பெருமளவில் கிளறிவிட்டது. அந்நிகழ்ச்சியின் பின்னர் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் பறக்கும் தட்டுகள் தொடர்பான கருத்தியலுக்கு மேலும் வலுச்சேர்த்து, அது தொடர்பான பல ஆய்வுகளுக்கும் வழிகோரியது.

1947ம் ஆண்டு ஜுலை மாதம் நியுமெக்சிகோவில் அமைந்துள்ள ரொஸ்வெல் எனும் நகருக்கு அண்மையிலுள்ள பண்ணை ஒன்றில் அதிகாலையில் பெரும் சத்தத்துடன் மர்மமான பறக்கும் பொருளொன்று விழுந்து நொருங்கியது. இதனை பண்ணைக்கு அருகிலுள்ள பலர் கண்டு அருகில் சென்றுபார்த்தபோது தாம் அதுவரை கண்டிராத மர்மமான தட்டுப் போன்ற வடிவுடைய பொருளொன்று விழுந்து கிடப்பதையும் அதற்கு சற்று அப்பால் வீசுண்ட நிலையில் மூன்று விசித்திரமான அமைப்புடைய குள்ள மனிதர்கள் கிடப்பதையும் கண்டுள்ளனர். அதற்குள் இச்சம்பவம் தொடர்பாக அப்பண்ணையின் உரிமையாளர் அருகிலிருந்த விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் அங்கு வந்த விமானப்படையினர் சேதமடைந்து கிடந்த பறக்கும் தட்டையும் அதன் அருகில் வீழ்ந்து கிடந்த குள்ளமனிதர்களின் உடல்களையும் மிகவேகமாக அகற்றி தமது தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். இதிலே ஒரு குள்ளமனிதன் உயிருடன் காணப்பட்டதாகவும் அச்சம்பவத்தை நேரில் கண்ட பலர் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் 1947ம் ஆண்டு ஜுலை 8ம் திகதி இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரொஸ்வெல் விமானப்படைத் தளத்தின் (Roswell Army Air Field – RAAF) தகவல் தெரிவிக்கும் அதிகாரி வோல்டர் ஹோட் (Walter Haut) பத்திரிகைக்கான செய்தி வெளியீட்டில் தங்களது 509 வது படைப்பிரிவு ரொஸ்வெலுக்கு அருகிலுள்ள பண்ணையொன்றில் இருந்து, விழுந்து சேதமடைந்து காணப்பட்ட ‘பறக்கும் தட்டு’ ஒன்றை மீட்டெடுத்ததாக குறிப்பிட்டார். இச்செய்தி பத்திரிகைகளில் மிகப்பரபரப்பாக அச்சமயம் பேசப்பட்டது. ஆனால் இதற்கு மறுநாள் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்த விமானப்படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ரோஜர் எம்.ரமே (Roger M.Ramey) ரொஸ்வெலில் கைப்பற்றப்பட்டது பறக்கும் தட்டல்லவெனவும் அது வானநிலை பற்றிய ஆய்வுக்காக ஏவப்பட்ட ஒரு பலூனே (weather balloon) எனவும் கூறி மழுப்பியிருந்தார்.
அதன்பின்னர் ரொஸ்வெல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வெளியிட்டுவந்த பல ஆய்வறிக்கைகள், அவற்றில் முக்கியமானது மோகுல் கருத்திட்டம் (Project Mogul), அச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்ததுடன் இடையிடையே அது தொடர்பாக வெளிவரும் தகவல்களும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
இவற்றில் முக்கியமானது அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தின் ஆய்வும் அபிவிருத்திக்கும் (Research and Development – R&D) பொறுப்பான பகுதியில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்ற கேணல் பிலிப் ஜெ.கோசோ (Colonel Philip J.Corso) வெளியிட்ட தகவல்கள் ஆகும். பிலிப் வெளிநாட்டு தொழிநுட்பங்கள் தொடர்பான ஆய்வில் ஜெனர்ல் ஆதர் ருடோ (Gen.Arthur Trudeau) வின் தலைமையின் கீழ் R&D இல் பணியாற்றி வந்தார்.  இவரது முக்கிய தொழிலாக இருந்தது அமெரிக்க இராணுவத்தின் ஆயுத தொழிநுட்பத்தை ஏனைய நாட்டு தொழிநுட்பங்களுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்து அவற்றுக்கு மாற்றீடாக உள்ள தொழிநுட்பங்களை ஆய்ந்தறிந்து ஜெனரல் ஆதருக்கு அறிக்கை சமர்பிப்பதேயாகும்.

அந்தவகையில் 1961ம் ஆண்டு இவரது அலுவலகத்திற்கு ஜெனரல் ஆதரினால் ஆய்வுக்குட்படுத்தும்படி, அதியுயர் இரகசியம் (top secret) என குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்த ரொஸ்வெல் தொடர்பான ஆவணங்கள் அவரை ஆழ்ந்த அதிர்ச்சிக்குட்படுத்தியது. ஏனெனில் அதுவரை ரொஸ்வெல் சம்பவத்தை பிலிப் ஒரு கட்டுக்கதையாகவே கருதிவந்திருந்தார். ஆனால் ரொஸ்வெலில் கைப்பற்றப்பட்ட பறக்கும் தட்டு மற்றும் அதனுள் பயணித்த வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்களை கொண்டிருந்த அவ்வாவணங்களை ஆய்விற்குட்படுத்தி அத்தொழிநுட்பங்களை எவ்வாறு இராணுவ பாதுகாப்பு பொறிமுறைகளுக்குள் உள்வாங்கலாம் என ஆய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி ஜெனரல் ஆதர் அவரை பணித்திருந்தது பிலிப்பிற்கு உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிந்தது.
இதன்பின்னரே பிலிப் கோசோ ரொஸ்வெலில் நடந்த சம்பவம் உண்மை என்றும் அரசாங்கம் அச்சம்பவம் தொடர்பாக மக்களை பல வழிகளில் ஏமாற்றி அதனை மூடி மறைத்து வந்துள்ளதென்பதையும் உணர்ந்துகொண்டார். இச்சம்பவத்தை இருட்டடிப்பு செய்வதில் முக்கிய பங்காற்றியவர் உளவுத்துறையின் இயக்குனர் ரோஸ் கிளேன்கோட்டர் (Roscoe Hillenkoetter) என்பதையும் பின்னர் அறிந்துகொண்டார்.
Add caption
உயர்மட்ட இரகசியமாக பேணப்பட்டு வந்த ரொஸ்வெல் தொடர்பான ஆவணங்களிலிருந்து தான் அறிந்துகொண்ட தகவல்களை பிலிப் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே உலகிற்கு வெளிப்படுத்தினார். அத்தகவல்கள், பறக்கும் தட்டில் பயணித்த வேற்றுக்கிரக வாசியினது பிரேத பரிசோதனையையும் பறக்கும் தட்டினது தொழிநுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்ப் பொறியியல் (reverse engineering) முறைக்கு உட்படுத்தி மேற்கொண்ட கண்டிபிடிப்புகளையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது. அவற்றை நாம் சற்று விபரமாக நோக்குவோம்.

வேற்றுக்கிரக உயிரினத்தின் பிரேதபரிசோதனை[1] (Medical autopsy of the Extraterrestrial Biological Entity)



ஆவணப்படுத்தப்பட்டிருந்த தகவல்களின்படி வேற்றுக்கிரக உயிரினத்தின் பிரேதபரிசோதனையானது வொஷிங்டனில் அமைந்துள்ள வோல்ட்ரர் ரீட் (Walter Reed) மருத்துவமனையிலேயே இடம்பெற்றுள்ளது. இப்பிரேத பரிசோதனையை மேற்கொள்ளும்போது அவ்வுயிரினத்தின் உடல் குறிப்பிடத்தக்களவு சிதைந்த நிலையில் இருந்த்தால் சில உடற்கூறுகளை முறையாக ஆராய முடிந்திருக்கவில்லை என உடற்கூற்றியலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு காரணம் நமது பூமியினது வளிமண்டலம் அவ்வுயிரினத்திற்கு நச்சுத்தன்னையானதாக இருந்திருக்கலாம்.  பிரேதபரிசோதனையை மேற்கொண்ட உடற்கூற்றியலாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அவ்வுயிரினமானது நீண்ட தூர பிரயாணங்களுக்கு நன்றாக இசைவாக்கம் பெற்றிருந்தது. வெளித்தோற்றத்தில் அவ்வுயிரினம் மனிதனைப் போன்ற உடலமைப்பையே கொண்டிருந்தது. உடலுடன் ஒப்பிடும்போது தலை மிகப்பெரிதாக இருந்தது. அதற்கு பெரிய இரண்டு கண்களும் சிறிய மூக்கும் வாயும் காணப்பட்டது.
                                              

நெஞ்சுக்கூட்டினுள் (thorax) ஒப்பீடளவில் அது மிகப்பெரிய இருதயத்தினையும் சுவாசப்பைகளையும் கொண்டிருந்தது. அதனது குறைந்த கொள்ளளவுடைய நன்றாக விருத்தியடையாத சுற்றோட்டத்தொகுதியில் (circulatory system) நிணநீர் (lymph) போன்ற பாயம் (fluid) இருப்பதையும் அவதானித்துள்ளனர். அப்பாயதால் விருத்தியடையாத சுற்றோற்றத்தொகுதியில் வேகமாக சுற்றி ஓடமுடியாது. எனவே அதனது இருதயம் மனிதனைப் போன்றதன்றி குறைந்த எண்ணிக்கையான துடிப்புகளை மேற்கொண்டே பாயத்தை மெதுவாக அதனது சுற்றோட்டத்தொகுதியில் ஓடவிட்டுள்ளது. இப்பொறிமுறைகள்  அவ்வுயிரினம் மெதுவான அனுசேப செயன்முறையையும் (slow metabolism) கூடிய ஆயுளையும் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.



அவ்வுயிரினத்தின் இருதயத்தை உடற்கூற்றியலாளர்கள் பரிசோதிக்கும்போது அது பொருமளவில் உருக்குலைந்தே காணப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ளனர். இருதயம் சுற்றியோடும் பாயத்தை தற்காலிகமாக சேமித்து வைத்திருப்பதற்கேற்றவாறு அதிகளவு கொள்ளளவுடையதாக காணப்பட்டது. மேலும் மனிதனது இருதயம் போன்று தடித்த இதயச் சுவர்களை அது கொண்டிருக்கவில்லை. இதற்குக் காரணம் குறைந்த ஈர்ப்புவிசைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வதற்கான இசைவாக்கமாக அது இருந்திருக்கலாம். ஏனென்றால் ஈர்ப்புவிசைக்கெதிராக செயற்பட்டு குருதியை பாய்ச்சுவதற்கே மனிதனது இருதயம் போன்று தடித்த இதயச்சுவர்கள் தேவை.



கிட்டத்தட்ட நான்கு அடி உயரமேயுடைய அவ்வுயிரித்தின் நெஞ்சுக்கூட்டின்  பெரும்பகுதியை அதனது இரண்டு சுவாசப்பைகளுமே (lungs) நிரப்பியிருந்தன. அசாதாரணமாக பெரிதாக விருத்தியடைந்திருந்த அச்சுவாசப்பைகள் உண்மையில் உடலுக்கு தேவையான வளியை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்து மெதுவாக சுற்றோட்டத்திற்குள் சேர்ப்பதற்காகவே ஆற்றலை கொண்டிருந்தன. இதன் மூலம் பறக்கும்தட்டில் நீண்டதூர பிரயாணங்களுக்காக பெருமளவு வளியை சேமித்து வைத்திருப்பதற்கான தேவை இருந்திருக்கவில்லை.



அவ்வுயிரினத்தின் எலும்புத் திசுக்களை (skeletal tissue) ஆராய்ந்தபோது அவை மனிதனது எலும்புகளை விட மென்மையானவையாகவும் நார்கள் (fibres) போன்று இலகுவில் வளையக்கூடியதாகவும் இருந்துள்ளது. இத்தன்மை அவ்வெலும்புகளுக்கு அதிர்ச்சி உறிஞ்சும் ஆற்றலை அளித்து பறக்கும் தட்டு சடுதியாக ஆர்முடுகும்போதும் அமர்முடுகும்போதும் மற்றும் நீண்டதூரபயணங்களின்போது அவ்வுயிரினங்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பாரிய அதிர்வு விசைகளில் இருந்தும் எலும்புகளை நொருங்கி சிதையவிடாமல் பாதுகாத்திருக்கலாம்.

இவ்வாறு மிகச்சிறப்பாக நீண்ட தூரப்பயணங்களுக்கான உடற்கூற்று இசைவாக்கங்களை கொண்டிருந்த இவ்வுயிரினங்கள் உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகளா அல்லது வேற்றுக்கிரகவாசிகளால் உயிர்ப் பொறியியல் (bioengineered) முறை மூலம் நீண்டதூரப் பிரயாணங்களுக்கு ஏற்றவகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உயிரினங்களா என்ற சந்தேகமும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.
இவ்வுயிரினத்தின் வயிற்றுப் பகுதியினை ஆராய்ந்தபோது அதனுள் மனிதர்களில் காணப்படுவது போன்று குடலமைப்புகளைக் கொண்ட சமிபாட்டுத்தொகுதியோ சிறுநீரகங்களையொத்த கழிவகற்றும் தொகுதியோ காணப்படவில்லை. இவ்விடயம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் இவ்வுயிரினங்கள் எம்முறைமூலம் சக்தியைப் பெறுகின்றன? எவ்வாறு தமது கழிவுகளை அகற்றுகின்றன? அவை எத்தகைய இரசாயன மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன? எவ்வாறு நீண்ட தூரப் பிரயாணங்களின்போது தம்மை தக்கவைத்துக் கொள்கின்றன?  என்பன தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு அவர்களால் வரமுடியவில்லை. அது தொடர்பாக பல அனுமானங்களையும் முன்வைத்தார்கள்.

அவர்களது அனுமானங்களின்படி அவ்வுயிரினத்தின் சுற்றோட்டத்தொகுதியில் காணப்படும் நிணநீர் போன்ற பாயமே அதனது உடற்தொழிற்பாடுகளுக்கான ஊட்டச்சத்துக்களை விநியோகிப்பதுடன் உடலில் உருவாகும் கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு ஊடகமாக (மனிதனின் குருதியைப் போன்று) தொழிற்படவேண்டுமெனவும் உடற்கழிவுகள் அவ்வுயிரினத்திற்கு வெளியே தோல் போன்று காணப்பட்ட மெல்லிய அமைப்பினூடாகவே வெளியெற்றப்படவேண்டும் எனவும் கூறியிருந்தார்கள்.
இவ்வுயிரினத்தின் உட்தோற்பகுதி மருத்துவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்தது. ஒரு மெல்லிய ஊடுபுகவிடக்கூடிய கொழுப்புப்படை (fatty layer) போன்று காணப்பட்ட உட்தோல் நிணநீர் போன்ற பாயத்துடன் தொடர்ச்சியாக பதார்த்தங்களை பரிமாற்றம் செய்யக்கூடிய விதத்தில் தொடர்பில் காணப்பட்டது. இத்தோற்பகுதியே கழிவுகளை பாயத்திலிருந்து வெளியேற்றியும் அக்கழிவுகளை மீண்டும் பாவிக்கக்கூடிய வகையில் மீழ்சுழற்சிக்கு உட்படுத்தியும் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஒரு எடுகோளை முன்வைத்தார்கள். அதற்கேற்றால்போல் பறக்கும் தட்டினுள்ளும் எந்தவித உணவு சேமிப்புகளுமோ கழிவகற்றும் வசதிகளுமோ காணப்படவில்லை.



அதன் வெளித்தோற்பகுதியானது ஒரு தனி வெளியுறை போன்று அதன் உடலை இறுக்கமான மூடி ஒரு பாதுகாப்பு உறையாகக் காணப்பட்டது. அவ்வெளியுறை மிகவும் வலிமையானதாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. இது அவ்வுயிரினத்தை அண்டக்கதிர்களில் (cosmic rays) இருந்து பாதுகாக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஏனெனில் பாதுகாப்பில்லாமல் விண்வெளிப்பயணத்தினை மேற்கொள்ளும்போது இவ்வண்டக்கதிர்கள் உடலுக்கு பலத்த தீங்கை விளைவிக்கக்கூடியவை.



பிரேதபரிசோதனையின்போது அவ்வுயிரினத்தின் மூளையின் அமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஏனெனில் ரொஸ்வெலில், இவ்வுயிரினம் பறக்கும் தட்டிற்கு வெளியே வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது அதனை நேரடியாக அணுகிய சில விமானப்படை வீர்ர்கள் அவ்விடத்தில் தங்களை ஒரு இனம்புரியாத ஆழ்ந்த துயரமும் வேதனையும் கவ்விக்கொண்டதாகவும் வருந்திக்கொண்டிருந்த அவ்வுயிரினத்திடம் இருந்துவந்த ஏதோவொரு வீரியமான எண்ண அலைகள்  தமக்கு சில விடயங்களை சொல்ல முற்பட்டதாகவும் ஆனால் அதனை தங்களால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை எனவும் சாட்சியம் அளித்திருந்தனர். இதனை ஒரு முக்கியமான விடயமாக மருத்துவர்கள் கருதினார்கள். ஏனெனில் அவ்வுயிரினம் தனக்கு ஏற்பட்ட வேதனையை விமானப்படை வீர்ர்களிடம் நேரடியாக தனது எண்ணவெளிப்பாட்டு (thought projection) அல்லது ரெலிபதி முறைமூலம் தெரிவிக்க முற்பட்டதே காரணம் எனவும் ஆனால் அவ்வுயிரினம் தொடர்புகொள்ள முயன்ற எண்ணவெளிப்பாட்டு அல்லது ரெலிபதி முறையை கிரகிக்கும் ஆற்றல் நமது மூளைக்கு இருக்கவில்லை என்றும் கூறியிருந்தார்கள்.



ஆனால் மருத்துவர்கள் அதனது மென்மையான மண்டை ஓட்டை அகற்றி அதனது மூளையை பரிசோதனை செய்ய முற்பட்டவேளையில் அது மிகவும் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டது. அதனால் மருத்துவர்களுக்கு அதனது மூளையின் பகுதிகளை சிறப்பாக மதிப்பிட முடியவில்லை. அவ்வுரியினம் உயிருடன் இருந்திருந்தால்க்கூட இன்று காணப்படும் கணனிமயப்படுத்தப்பட்ட எக்ஸ்ரே வரைபு இயந்திரங்கள் [Computed Tomography (CT)  machines]  அக்காலத்தில் காணப்படாததால் மருத்துவர்களால் அவ்வுயிரினத்தின் மூளையின் அமைப்பை சிறப்பாக கணித்திருந்திருக்க முடியாது. அவர்களது அறிக்கையிலும் அவ்வுயிரினத்தின் மூளைக்குள்ள ஆற்றல்கள் தொடர்பாக வேறு எந்த தகவல்களும் இடம்பெற்றிருக்கவில்லை.



ஆனால் அவ்வுயிரினங்களின் மூளையின் ஆற்றல் தொடர்பான மேலும் சில தகவல்கள் பறக்கும் தட்டில் இருந்து மீட்கப்பட்ட ‘தலைப்பட்டிகள்’ (headbands) தொடர்பான ஆவணங்களில் காணப்பட்டன. அதிலே குறிப்பிட்டிருந்தபடி, எந்தவித வேலைப்பாடுகளும் அலங்காரங்களும் அற்றுக் காணப்பட்ட தலைப்பட்டிகள் வளையக்கூடிய பிளாஸ்ரிக் போன்ற ஒரு பொருளில் பதிக்கப்பட்டிருந்தது. அது மின்மூளைவரைபி (electroencephalogram – EEC) இனது கடத்திகளை (conductors) ஒத்துக் காணப்பட்டது. அப்பட்டியை வேற்றுக்கிரக உயிரினத்தின் பெரிய அகன்ற தலையுடன் பொருத்திப் பார்த்தபோது அதன் காதுகளுக்கு சற்று மேலாக தலையின் சுற்றளவுடன் மிகச்சரியாக பொருந்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கருவி வேற்றுக்கிரவாசிகளின் தொலைத்தொடர்பு சாதனமாக பயன்பட்டிருக்கலாம் எனவும் இதனை ஆராய்ந்த பொறியியலாளர்களால் அனுமானிக்கப்பட்டிருந்தது.



509வது படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் அக்கருவியை தனது தலையுடன் பொருத்திப் பார்த்து அது எவ்வாறு தொழிற்படுகின்றது என அறிய முயற்சித்திருந்தார். ஆனால் அத்தலைப்பட்டியில் எவ்விதமான ஆளிகளோ கம்பிகளோ அல்லது அதனை இயக்கும் பொறிமுறைகளோ காணப்படவில்லை என்பதால் அதனை அவரால் இயக்க முடிந்திருக்கவில்லை. அத்தோடு தலைப்பட்டி வளைந்து விரியக்கூடியதாக இருந்தாலும் அதனை அவரது தலையின் அளவுக்கேற்ப மாற்றியமைக்க முடிந்திருக்கவில்லை. இதன் பின்னர் அத்தலைப்பட்டியின் அனைத்து பகுதிகளுடனும் தொடுகையை ஏற்படுத்தக்கூடிய வகையில் சற்று பெரிய தலையை உடைய சில அதிகாரிகள் அதனை தமது தலையில் அணிந்து பரிசோதித்து பார்த்தபோது தலைக்குள் மின்னதிர்ச்சி ஏற்பட்டதுபோன்ற உணர்வைப் பெற்றிருந்தார்கள். பின்னர் அத்தலைப்பட்டியை அவர்கள் தலையைச் சுற்றி மெதுவாக நகர்த்தியபோது பலவிதமான நிறங்கள் தங்கள் கண்களுக்குள் தோன்றி மறைந்ததாகவும் தாங்கள் வலிமையான தலையிடியை உணர்ந்தாகவும் தெரிவித்திருந்தார்கள்.

இப்பரிசோதனைகளை நேரில் பார்த்த சில அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் அத்தலைப்பட்டியானது மூளையின் வெவ்வேறு பகுதிகளை தூண்டி தகவல்களை பரிமாறிகொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளதென தெரியவந்தது. இக்கருவியை EEC உடன் ஒப்பிடும்போது, நமது தொழிநுட்ப அறிவுகொண்டு விளங்கிக்கொள்ள முடியாத மிகவும் சிக்கலான பொறிமுறைகளினூடாகவே வேற்றுகிரக உயிரினங்களின் மூளையில் உருவாகும் கணத்தாக்குகளை (impulses) உணர்ந்தறிந்து அவற்றை பரிமாற்றிக் கொள்வதற்கான தகவல்களாகவும் பறக்கும் தட்டை இயக்கும் பிரத்தியேகமான கட்டளைகளாகவும் மாற்றுகின்றது எனத்தெரிவித்திருந்தார்கள். விமானப்படையின் 509வது பிரிவின் பொறியியலாளர்களும் ஆய்வாளர்களும் பறக்கும்தட்டினை விரிவாக பரிசோதித்த பின்னர் அதனுள் பொதுவாக பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கருவிகளோ உந்துவிசை அமைப்புகளோ (propulsion system) காணப்படவில்லை என்பதை அறிந்துகொண்டார்கள். பறக்கும் தட்டினை இயங்கவைப்பதற்கான சூட்சுமத்தை ஆராய முயன்ற பின்னர் அவர்கள், இப்பறக்கும் தட்டானது இவ்வேற்றுக்கிரக உயிரினங்களின் மூளையில் உருவாகும் பிரத்தியேக மின் கட்டளைகளால் மாத்திரமே (brainwave guidance system) இயக்குவிக்கப்படக்கூடியது என்ற எடுகோளை முன்வைத்தார்கள். இதன்படி வேற்றுக்கிரக வாசிகளின் மூளையில் உருவாகும் கட்டளைகள் தலைப்பட்டியினூடாக பறக்கும்தட்டின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.

பறக்கும் தட்டினைப் பயன்படுத்தி எதிர்ப் பொறியியல்முறை மூலம் அடைந்த தொழிநுட்பங்கள்
பிலிப் ஜெ.கோசோவின் தகவல்களின் அடிப்படையில் ரொஸ்வெலில் கைப்பற்றப்பட்ட பறக்கும் தட்டின் தொழிநுட்பங்களை, முக்கியமாக உந்துவிசை மற்றும் வழிச்செலுத்தும்  அமைப்புகளை (navigation system) ஆய்ந்தறியும் நடவடிக்கைகள் முதலில் கலிபோர்னியாவிலுள்ள நோட்டன் விமானப்படைத்தளத்திலும் (Norton Air Force base ) பின்னர் நெவேடா பிரதேசத்திலுள்ள நெல்லிஸ்  விமானப்படைத்தளத்திலுமே (Nellis Air Force base )  நடைபெற்றுள்ளன. கிட்டத்தட்ட 30 வருட ஆராய்ச்சிகளின் பின்னர் 1970 களில், ரொக்கெட் அல்லது ஜெட் இயந்திரங்கள் போன்ற எவ்விதமான பாரம்பரிய உந்துவிசை அமைப்புகள் எதுவுமற்ற பறக்கும் தட்டினை இயங்கவைப்பதிற்கான பொறிமுறைகளைகள் தொடர்பாக பொறியியலாளர்கள் தெளிவான விளக்கத்தினை பெற்றிருந்தார்கள். அதனடிப்படையில் பறக்கும் தட்டானது அதனுள் பிறப்பிக்கப்படும் மின்காந்த அலைகளின் பரம்பலினாலேயே இயக்கத்தை பெறுவதாக அறியப்பட்டது. மின்காந்த அலைகளை பிறப்பிக்கும் முகமாக பறக்கும் தட்டானது பெருமளவு சக்தியை தன்னகத்தே சேகரித்து வைத்திருக்கும் இயல்பை பெற்றிருந்தது. அதாவது ஒரு பாரிய கொள்ளளவி போன்று தொழிற்பட்டுள்ளது. இம்முறைமூலம் பறக்கும் தட்டு ஏறக்குறைய 7000mph வேகத்தில் பயணிக்கும் ஆற்றலை பெற்றிருந்திருக்கும் என கணிக்கப்பட்டது. இவ்வாறான அதிவேகத்தில் சாதாரண விமானங்களில் பயணிக்கும்போது உள்ளேயிருக்கும் விமானி மிகவலிமையான ஈர்ப்பழுத்த விசையினால் (g-force) மேசமாகப் பாதிக்கப்படுவார். ஆனால் பறக்கும் தட்டினை சுற்றி உருவாகும் மின்காந்த அலைகள் உள்ளேயிருக்கும் வேற்றுக்கிரகவாசி ஈர்ப்பழுத்ததால் பாதிக்கப்படுவதை தடுத்துள்ளது.



வேற்றுக்கிரக வாசிகள் தாங்கள் பிறப்பிக்கும் வீரியமிக்க மின்காந்த அலைகளினுள் தங்களை எவ்வாறு தக்கவைத்து பறக்கும் தட்டினை இயக்கினார்கள் என்பது பலருக்கு ஆச்சரியமளித்தது. வேற்றுக்கிரக வாசிகள் உண்மையில் பறக்கும் தட்டின் விமானிகள் மாத்திரமல்லாமல் அதனுள் பிறப்பிக்கப்படும் மின்னோட்டத்தை தம்மூடு கடத்தக்கூடிய ஒரு மின் கடத்திகளாகவும் தொழிற்பட்டுள்ளார்கள். அவ்வாற்றலால் அவர்களால் பறக்கும் தட்டினுள் பிறப்பிக்கப்படும் வீரியமிக்க மின்காந்த அலைகிளினுள்ளும் தம்மை தக்கவைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் பறக்கும் தட்டின் இயக்கத்திற்கு தேவையான ஒரு பகுதியாக தொழிற்பட்டுள்ளார்கள். அவர்கள் மின் கடத்திகளாக தொழிற்படுவதற்கு அவர்களை சுற்றியிருந்த வெளித்தோற்பகுதியே காரணமாக இருந்திருக்கவேண்டும் என்றும் அனுமானிக்கப்பட்டது. இந்தவகையில் பறக்கும்தட்டானது அதில் பயணித்த வேற்று உயிரினங்களின் உடலின் விரிவாக்கமென்றே (The vehicle was simply an extension of their own bodies) கருத்து தெரிவிக்கப்பட்டது.

பறக்கும் தட்டின் தொழிநுட்பத்தினூடாக நாம் அடைந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்

உருவ தெளிவாக்கிகள் – இரவுப்பார்வைக் கண்ணாடிகள் (Image intensifiers, which ultimately became “night vision” )
லேசர் கருவிகள் (Lasers)
இழை ஒளியியல் (Fiber optics)
”மூன்றாவது மூளை” – வழிகாட்டல் அமைப்புகள் ["Third Brain" guidance systems (based on the headbands reportedly used by the aliens)]
துணிக்கை வீச்சுக்கள் [Particle beams ("Star Wars" antimissle energy weapons)]
மின்காந்த உந்துவிசை அமைப்புக்கள் (Electromagnetic propulsion systems)
வலிமையான பற்றிப்பிடிக்கும் இழைகள் (Supertenacity fibers)
மூலக்கூறு சீராக்கலுக்குட்பட்ட கலப்புலோகங்கள் (Molecular alignment metallic alloys)
ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுக்கள் (Integrated circuits and microminiaturization of logic boards)

மேற்கூறிய தகவல்களில் பெருபாலானவற்றை பிலிப் ஜெ.கோசோ R&D கடமையாற்றும்போது ஆய்விற்காக பெற்றுக்கொண்ட ஆவணங்களிலிருந்தே அறிந்துள்ளார். அவர், தான் ஒருபோதும் பறக்கும் தட்டினை நேரடியாக பார்வையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் தற்போது நாம் காணும் மர்மமான பறக்கும் பொருட்களில் அமெரிக்க விஞ்ஞானிகளினால் நீண்டகால ஆராய்ச்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டுகளை ஒத்த பொருட்களும் அடங்கியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் 1947 ல் ரொஸ்வெலில் விழுந்ததாக நம்பப்படும் பறக்கும் தட்டும் அதனுள் இருந்த வேற்றுக்கிரக வாசிகளும் பிரபஞ்சத்தின் எப்பகுதியில் இருந்து இங்கே வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? போன்ற கேள்விகள் தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் வேற்றுக்கிரக வாசிகள், ரொஸ்வெல் சம்பவத்திற்கு பின்னரும் பல தடவைகள் பூமிக்கு வந்து சென்றுள்ளதாகவும் அவர்களுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் இரகசிய தொடர்புகள் உண்டு என்றும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது 1989ம் ஆண்டு  ஏரியா 51ம் (Area 51) அதனுடன் இணைந்த ஏரியா S4 ல் பணிபுரிந்த பொப் லாசர் (Bob Lazar) என்ற பௌதீகவியலாளர், ஏரியா 51 ம் S4 வும் அதிசக்தி வாய்ந்த விமானங்களையும் வேற்றுக்கிரவாசிகளிடமிருந்து பெற்ற பறக்கும் தட்டுகளையும் பரிசோதிக்கும் இடமாக உள்ளதென்றும் தானும் இப்பரிசோதனை நடவடிக்கைகளில் பணிபுரிந்ததாகவும் தெரிவித்தார் கருத்துக்கள் ஆகும். இவரது கருத்துக்களும் ஆரப்பத்தில் பலத்த சர்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் பின்னர் அமெரிக்க அரசாங்கத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

இக்கருத்துக்கள் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது ஆய்விற்குரிய விடயமாக இருந்தாலும் இவ்விடயங்களில் எதோவுரு உண்மையுண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. பறக்கும்தட்டுகள் மற்றும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரவாசிகள் தொடர்பான விடயங்கள் முடிவற்று விரிந்துகொண்டே செல்கின்றது. இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை தொடர்பான மர்மங்களை மேலும் பல நாட்களுக்கு மூடிவைத்திருக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

5 comments:

Selvaraj said...

வாழ்த்துக்கள்! மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

abimanju said...

நன்றி

sj van said...
This comment has been removed by the author.
sj van said...

சுட்டு போடும் போதும் தமிழம் எண்டு கடுரிங்க என்ன ப்லோக்விட டைம் முன்னுக்கு போட்டு but realy like this

abimanju said...

என்னை கவரத பதிவுகள் கொப்பி அடிக்கலாம் நமக்கு தெரிந்தது எல்லோருக்கு, தெரியட்டும்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls