மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணிக் கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழியும் நிலையில் காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விதத்தில் அமைந்ததுமான கிராமங்களுள் அரிப்புக் கிராமமும் ஒன்று. இந்த அரிப்புக் கிராமத்தில் பழமை வாய்ந்த அல்லிராணிக் கோட்டை காணப்படுகிறது. கடந்த யுத்த காலத்தின் போது இந்தப் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அல்லிராணிக் கோட்டை என்ற பெயரை மட்டும்தான் மக்கள் கேட்டிருப்பார்களே தவிர அதனைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.
யுத்தம் ஓய்ந்த பின்னர் தற்போது அதனைப் பார்வையிடுவதற்கான சூழ்நிலை தோன்றியுள்ளது. கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட இந்த அல்லிராணிக் கோட்டை இராவணன் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்ததும் சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழ்வதுமான அல்லிராணிக்கோட்டை தற்போது கடலரிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றது.
இதனைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனையளிப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.
இந்தக் கோட்டை தொடர்ந்தும் சிதைந்து வருவதுடன் கடலரிப்பாலும் பெரும் அபாயத்தை எதிர்கொள்கிறது. ஆனால் இந்த நிலையிலும் இதனைப் பார்வையிடுவதற்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் சரித்திர சிறப்புக்களையும் காட்டி நிற்கும் இந்த அல்லிராணிக் கோட்டையைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியது உரியவர்களின் தலையாய பணியாகும். இதனையே மன்னார் மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
0 comments:
Post a Comment